தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் அதிதீவிர 3ஆம் கட்ட (சிவப்பு) மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் எந்நேரத்திலும் மண்சரிவு, பாறைகள் வீழ்தல், மண்மேடுகள் சரிந்து விழுதல் அல்லது நிலம் தாழிறங்குதல் போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் உடனடியாக அபாயகரமான இடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களிலோ அல்லது தற்காலிக முகாம்களிலோ தஞ்சமடையுமாறு கோரப்படுகின்றனர்.
மேலும், சுவர்களில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்வடைதல், நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல் மற்றும் ஊற்றுக்களில் திடீரென சேற்று நீர் வெளிப்படுதல் போன்ற மண்சரிவுக்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறும், மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாகச் செயற்படுவதுடன் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கோரப்படுகின்றனர்.