கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (30.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அண்மை நாட்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைத்து சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருந்தாலும், வாகனம் செலுத்துவதற்குத் தேவையான பொறுப்புணர்வும் மனநிலையும் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். எனவே, இளைய சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பெறுமதிமிக்க உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் புவியியல் அமைவிடமும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடைமுறைகள், சிகை அலங்காரம், உணவுப் பழக்கவழக்கங்கள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பொலீசாருடன் தொடர்புடைய விடயங்கள் ஆகியன விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, பாடசாலைகள் சார்ந்த துறைசார் பிரதிநிதிகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் முன்வைத்த கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அவை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தவகையில் வீதிகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதற்கும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் பொருத்தமான இடங்களில் CCTV கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கவும், அதற்குத் தேவையான நிதியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை நேரமான காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையும், பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரையும் வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடை செய்து, அதனைப் பொலீசார் கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை நேர போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் பொலீசாருடன் இணைந்து சமூக மட்ட அமைப்புகள் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
பொலீசார் சட்ட நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல், பாடசாலைகளின் ஒழுக்க மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், சிகை அலங்கார நிலையங்கள் பாடசாலை வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டுமே சிகை அலங்காரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், பதிவு செய்யப்படாத சிகை அலங்கார நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக உரிய கண்காணிப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், துறைசார் திணைக்களங்கள் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இத் தீர்மானங்களுக்கு மேலதிகமாக பொதுமக்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் கிடைத்தால் அவற்றையும் ஆராய்ந்து தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்திற்குள் தேவையற்ற வாகனங்கள் நுழைவதை உரிய தரப்பினர் கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ்கள் உரிய இடங்களில் மட்டுமே தரித்து நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதனை போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள் மேற்பார்வை செய்யுமாறும்
அறிவுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கல்வித் துறைசார் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், போக்குவரத்து துறைசார் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலகத்தின் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.