டொராண்டோ — முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கனடிய கொள்கை ஆய்வு மையமொன்றில் (Think tank) சிறப்புரை ஆற்றுவதற்காக இன்று டொராண்டோ வருகை தந்துள்ளார்.
அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியான இவர், ‘கனடா 2020’ (Canada 2020) அமைப்பின் வருடாந்திர விழாவில் ‘ஃபேர்மாண்ட் ராயல் யார்க்’ (Fairmont Royal York) விடுதியில் உரையாற்ற உள்ளார்.
பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மூன்று முறை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தார். முதலில் 2009 ஆம் ஆண்டில் ஒட்டாவாவுக்கு வருகை தந்து முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரைச் சந்தித்தார்.
அதன்பிறகு, G8 மற்றும் G20 உச்சிமாநாடுகள் மற்றும் வட அமெரிக்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் கனடாவுக்கு வந்திருந்தார்.
ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத இந்த ‘கனடா 2020’ நிகழ்வு, அவர் டொராண்டோவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக அமைகிறது.
“மிகவும் நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்காலச் சிந்தனை கொண்ட கனடாவை உருவாக்குவதற்கான” கொள்கை ரீதியான ஆலோசனைகளை முன்னெடுப்பதே தமது நோக்கம் என்று அந்த கொள்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.