சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக தனது சமூக வலைதள கணக்குகள் மற்றும் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அவதூறான குறுஞ்செய்திகளையும், சில புகைப்படங்களை கிண்டல் செய்யும் விதமாகவும் அந்த நபர் அனுப்பி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மர்ம நபர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் புகாரில் இணைத்து வழங்கியுள்ள மேயர் பிரியா, அவர் யார் என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர், அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று மேயர் பிரியா நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று இந்தப் புகாரை அளித்துள்ளார். மாநகராட்சி மேயருக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய மற்றும் தொல்லை கொடுத்த இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#MayorPriya #CyberCrime #Chennai #SocialMediaHarassment #PoliceComplaint #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #ChennaiCorporation #CyberSecurity #PoliticalNews #TamilNewsLive