தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு இதுவரை அறியப்படாத முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்கால உயிரியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய இனத்திற்கு ‘லியோபார்டஸ் தில்காயோ’ அல்லது ‘தில்காயோ டைகர் கேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டில் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று உலகளவில் உத்தியோகபூர்வமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வீட்டுப் பூனையை விட அளவில் சிறியதான இந்த காட்டுப்பூனை, மெலிந்த உடலமைப்பு, புள்ளிகள் நிறைந்த தோல் மற்றும் உருண்டையான காதுகளைக் கொண்டுள்ளது.
டி.என்.ஏ பரிசோதனைகளின்படி, இந்த பூனை இனம் சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஏனைய டைகர் கேட் இனங்களிலிருந்து பிரிந்து தனித்துவமாக உருவெடுத்துள்ளது.
அருங்காட்சியகங்களிலும் இல்லாத இனம்: வழக்கமாகப் புதிய பாலூட்டி இனங்கள் கண்டுபிடிக்கப்படும்போது அவற்றின் மாதிரிப் பொருட்கள் அருங்காட்சியகங்களில் இருக்கும். ஆனால், ‘தில்காயோ’ பூனையின் எந்தவொரு மாதிரியும் அருங்காட்சியகங்களில் கூட இல்லாத முற்றிலும் புதிய கண்டுபிடிப்பாகும்.
பொலிவியாவின் ‘செண்டா வெர்டே’ வனவிலங்கு காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பாஓலா நோகலேஸ்-அஸ்காரன்ஸ் என்பவரால் இந்த இனம் அடையாளம் காணப்பட்டது.
உள்ளூர்வாசி ஒருவர் சாதாரண பூனைக்குட்டி என நினைத்து நூட்ல்ஸ், சோறு, முட்டை வழங்கி வளர்க்க முயன்று, பின்னர் அது காட்டுப்பகுதி விலங்கு என உணர்ந்து காப்பகத்தில் ஒப்படைத்த பூனையை ஆய்வு செய்தபோதே இந்த புதிய இனம் வெளிச்சத்திற்கு வந்தது.
உள்ளூர் பொலிவிய பழங்குடியின மக்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பூனையை “தில்காயோ” என்றே அழைத்து வந்துள்ளனர். அவர்களின் பாரம்பரிய அறிவை மதிப்பளிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் அதே பெயரை அறிவியல் பெயராகச் சூட்டியுள்ளனர்.
தற்போது தென்னமெரிக்காவில் உள்ள 05 டைகர் கேட் இனங்களும் காடழிப்பு மற்றும் விவசாய நில விரிவாக்கத்தால் வேகமாக அழிந்துவரும் சூழலில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ‘தில்காயோ’ பூனையினத்தைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.