கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் உள்ள ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) கைது செய்துள்ளது.
இச்சம்பவங்கள் கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்குவாக்குசி வீதி (Chinguacousy Road) மற்றும் குவீன் வீதி கிழக்கு (Queen Street East) ஆகிய பகுதிகளுக்கு அருகில் நடந்துள்ளன.
சந்தேக நபர் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள அறைகளுக்குள் (Vestibules) முன்கூட்டியே காத்திருந்து, வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை முடித்தவுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணத்தைப் பறித்துச் சென்றுள்ளதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு முதியவரும் அடங்குவர்.
இதனைத் தொடர்ந்த தீவிர விசாரணை மற்றும் காவல்துறையின் இரகசியக் கண்காணிப்பு நடவடிக்கையின் பின்னர், நிலையான முகவரி எதுவும் இல்லாத 34 வயதுடைய சுரேஷ்குமரன் ராஜபுத்திரன் (Sureshkumaran Rajaputhiran) என்ற நபர் கடந்த ஜூன் 16 ஆம் தேதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது மூன்று கொள்ளைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், பிணை விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.