பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்த அவலமான யுகம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, அண்மைய சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த நாட்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. வரலாற்றில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்டுள்ளனர். உண்மையில் இது மிகவும் மோசமான சூழலாகும். எவ்வாறிருப்பினும் அந்த யுகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அண்மையில் பதிவான இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சின் செயலாளருடன் நானும் பெருந்தோட்டக் கம்பனிகளை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடினோம். பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரிகள், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சகலரதும் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நாம் எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்காகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவற்றிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு என்னும் நாம் முன்னிற்போம் என்றார்.