கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்கரைப்பற்று பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த வர்த்தக நிலையம் 2 கிலோ அரிசியை 800 ரூபாவிற்கு, அதாவது ஒரு கிலோவை 400 ரூபா வீதம் விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் விடயங்கள் அறிக்கை செய்யப்பட்டதையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.