வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் வியாழக்கிழமை (30.04) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா ஏ9 வீதியில் போராட்ட பந்தலில் நடைபெறும் அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் 3356வது நாளை எட்டியுள்ளது. இந்தச் சிறிய கூடம் இன்று உலகுக்கு ஒரு உண்மை, நீதி மற்றும் மறுக்கப்பட்ட உரிமைகளின் சின்னமாக மாறியுள்ளது.
இந்த தாய்மார்கள், உலகத் தமிழர்களை அமைதியான மற்றும் சட்டரீதியான முறையில் தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க ஒன்றுபட அழைக்கின்றனர். மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அதே நேரத்தில், வட்டுக்கோட்டை பகுதியில் 1976 இல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சிலர் கொண்டாடுகின்றனர். ஆனால், விளக்கம் இல்லாத கொண்டாட்டம் முன்னேற்றமல்ல. அது தோல்வி. கடுமையான உண்மை. நமது வழக்கு உலகிற்கு தெளிவாக சொல்லப்படவில்லை.
50 ஆண்டுகளாக, தமிழ் அரசியல் கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவை சரியான வரலாறு மற்றும் சட்ட அடிப்படையுடன் உலகிற்கு விளக்கப்படவில்லை. உணர்ச்சி மட்டும் உலகத்தை நகர்த்தாது. ஆதாரம், வரலாறு, சட்டம் இவையே உலகத்தை செயல்பட வைக்கும்.
இன்றும் நமது பண்டைய வரலாறு முறையாக விளக்கப்படவில்லை. நமது தேசிய அடையாளம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. நமது இறையாண்மை உரிமை சட்ட ரீதியாக வலுப்படுத்தப்படவில்லை. இந்த தோல்வி, உலக அங்கீகாரத்தை தாமதப்படுத்தியுள்ளது.
வரலாற்று உண்மை மறுக்க முடியாது. தமிழர்கள் 1948க்கு பிந்தைய ஒரு ‘சிறுபான்மை’ அல்ல. அவர்கள் வடகிழக்கில் வரலாற்று அடிப்படையுடன் வாழ்ந்த ஒரு தேசம். தனித்த அரசியல் மற்றும் நிர்வாக மரபுகளை கொண்ட மக்கள். சைவ மரபுகளுடன் சேர்ந்து தமிழ் புத்த மதப் பரம்பரையும் கொண்ட நாகரிகம். சிங்கள புத்த அரசியல் அமைப்புகள் உருவாகும் முன்பே தமிழ் இனம் தங்களது அடையாளத்துடன் இருந்தன, வளர்ந்தன, ஆட்சி செய்தன.
காலனித்துவப் பிழை திருத்தப்பட வேண்டியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தமிழர் தாயகம் மற்றும் சிங்கள பகுதிகள் தமிழர்களின் சம்மதமின்றி ஒன்றிணைக்கப்பட்டன. இது இயல்பான ஒன்றிணைவு அல்ல. ஒரு நிர்வாகத் தீர்மானம் வரலாற்று உண்மைகளை புறக்கணித்தது. அந்த பிழை இன்றும் தொடர்கிறது.
சர்வதேச சட்டம் எங்களுடன் உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் தெளிவாகக் கூறுகிறது. அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது. அவர்கள் தங்கள் அரசியல் நிலையைத் தீர்மானிக்க உரிமையுடையவர்கள். ஒரு மக்கள் தனித்த அடையாளம் கொண்டிருந்தால் வரலாற்று தாயகம் இருந்தால் தொடர்ந்து உரிமை மறுக்கப்பட்டால் இறையாண்மை மீட்பு ஒரு சட்டபூர்வமான கோரிக்கையாக மாறுகிறது.
இன்றைய நெருக்கடி இன்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வலையமைப்பு பரவி வருகிறது. பெண்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை சிதைந்துள்ளது.
இது விழாவுக்கான நேரமல்ல. தீர்மானிக்கும் தருணம். நாங்கள் அழைக்கிறோம். கோஷங்களை நிறுத்துங்கள் .ஆதாரங்களை பேசுங்கள். உணர்ச்சியைத் தாண்டுங்கள். சட்டத்தை முன்வையுங்கள். பிளவுகளை மறந்து ஒன்றுபடுங்கள்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை உறுதி செய்யுங்கள். தமிழ் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். தமிழ் பிரச்சினையின் வரலாற்று மற்றும் சட்ட அடிப்படையை அங்கீகரிக்குங்கள். நியாயமான அரசியல் தீர்வை ஆதரியுங்கள்.
வவுனியாவின் அந்தச் சிறிய கூடத்தில் இருந்துஇ 3,356 நாட்களாக ஒலிக்கும் குரல ”தாமதமான நீதி – நீதி அல்ல அது மறுப்பு.’50 ஆண்டுகள் கழித்து, கேள்வி ஒன்று மட்டுமே. நாம் இதை தெளிவாக உலகிற்கு சொல்லப்போகிறோமா? அல்லது மீண்டும் தவறவிடப்போகிறோமா? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.