காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு முறைப்பாடொன்றை அனுப்பிவைத்துள்ளது.
ஜேக் புர்கான்ஸ் (Jake Burkons) என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (HRF) இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒரு முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
HRF அமைப்பின் தகவல்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா (டெக்சாஸ்) ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட புர்கான்ஸ், இஸ்ரேலிய இராணுவத்தின் 7-வது கவசப் படையணியின் (7th Armoured Brigade) 603-வது போர் பொறியியல் பட்டாலியனின் (603rd Combat Engineering Battalion) ‘டி’ (Company D) பிரிவில் பணியாற்றியவர்.
அக்டோபர் 7, 2023 நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் தானாக முன்வந்து இராணுவத்தில் சேர்ந்ததாகவும், பின்னர் காசாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் என HRF புலனாய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
தற்போது ஜேக் புர்கான்ஸ் இராணுவப் பணியை முடித்துவிட்டு இலங்கையில் பயணம் மேற்கொண்டு வருவதாக அந்த உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க இலங்கை அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என HRF வலியுறுத்தியுள்ளது. பாரதூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரணை நடத்தி, தகுந்த இடங்களில் வழக்குத் தொடர வேண்டிய கடமை நாடுகளுக்கு இருப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
முழுமையான அறிக்கை:
ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (HRF), காசா பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில், இஸ்ரேலிய-அமெரிக்க இராணுவவீரர் ஜேக் புர்கான்ஸ் குறித்து இலங்கையின் தகுதியான அதிகாரிகளிடம் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முறைப்படியான அழிப்பை மேற்கொள்ளும் பட்டாலியன்: காசா முழுவதும் சிவில் உள்கட்டமைப்புகளைப் பெருமளவில் அழிப்பதில் 603-வது போர் பொறியியல் பட்டாலியன் ஒரு முக்கிய பிரிவாகச் செயல்பட்டுள்ளது என விரிவான ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கண்ணிவெடி அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதாகக் கூறினாலும், நடைமுறையில் இப்படைப்பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிகளை முறையாக இடிப்பதையே செய்துள்ளது.
அக்டோபர் 2023 முதல் 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இந்தப் பட்டாலியனால் மேற்கொள்ளப்பட்ட குறைந்தது 65 ‘கட்டுப்பாட்டு வெடிப்புத் தாக்குதல்களை’ (Controlled Demolitions) HRF ஆவணப்படுத்தியுள்ளது. குடியிருப்புகள், மசூதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்தன. மேலும், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் ஆகியவற்றிலும் இந்தப் படைப்பிரிவுக்குத் தொடர்பு உள்ளது.
ஜேக் புர்கான்ஸின் நேரடிப் பங்களிப்பு: 2025 அக்டோபர் – நவம்பர் காலப்பகுதியில் கான் யூனிஸில் (Khan Younis) நடந்த குறைந்தது ஒரு சட்டவிரோத அழிப்புச் சம்பவத்துடன் ஜேக் புர்கான்ஸுக்கு நேரடித் தொடர்பு இருப்பதை HRF விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது.
புர்கான்ஸ் தனது சமூக ஊடகங்களில் தான் காசாவில் (கான் யூனிஸ் மற்றும் ரஃபா) இருப்பதைக் காட்டும் காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். ஒரு காணொளியில், ஒரு சிவில் கட்டிடத்தின் உள்ளே சக வீரர்களுடன் அவர் வெடிமருந்து கம்பியைப் (detonation cable) பிடித்துக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு வெடிப்புத் தாக்குதலில் அவரது நேரடிப் பங்களிப்பைக் காட்டுகிறது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, உடனடி இராணுவத் தேவை இல்லாதபோது சிவில் சொத்துக்களை அழிப்பது சட்டவிரோதமானது. இந்தக் ‘கட்டுப்பாட்டு வெடிப்பு’ நடவடிக்கைகள் தற்காப்புப் போராக இல்லாமல், திட்டமிட்ட அழிப்பாகவே கருதப்படுகின்றன.
சட்ட ரீதியான வகைப்பாடு: ஜேக் புர்கான்ஸ் மற்றும் அவரது படைப்பிரிவு தொடர்பான இந்தச் செயல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் பின்வரும் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம்:
இராணுவத் தேவை இன்றி சொத்துக்களைப் பெருமளவில் அழித்தல்.
சிவில் இலக்குகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துதல்.
பாதுகாக்கப்படாத கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டுவீசுதல்.
இலங்கையில் இருப்பு மற்றும் சட்ட நடவடிக்கை: ஜேக் புர்கான்ஸ் தற்போது இலங்கையில் தங்கிப் பயணம் செய்து வருவதை HRF உறுதி செய்துள்ளது. ஆதாரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருப்பதால், சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றும் வகையில், அவர் மீது இலங்கை அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என HRF கோருகிறது.
தங்களது நிலப்பரப்பில் இத்தகைய குற்றவாளிகள் இருக்கும்போது, அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு அந்த நாட்டுக்கு உண்டு.
முடிவுரை: ஜேக் புர்கான்ஸின் வழக்கு என்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; இது காசாவில் செயல்படும் படைப்பிரிவுகளின் பொதுவான போக்கின் ஒரு பகுதியாகும். சர்வதேச குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குத் தேசிய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து ஹிந்த் ரஜப் அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்றும்.
“பொறுப்புக்கூறல் என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; அது ஒரு சட்டக் கடமையாகும்.