25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதத்தினால் தனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டதாகக் கூறுகிறார். இதனால் அவர் தனது பட்டப்படிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளார்.
நவோத்யா, பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) சர்வதேச விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மை (International Hospitality and Tourism Management) பயில்வதற்காக இடத்தைப் பெற்றிருந்தார். மூன்று ஆண்டு கால இந்தப் படிப்பிற்கான வெளிநாட்டு மாணவர் கட்டணம் 42,000 பவுண்டுகள் (சுமார் 1.6 கோடி இலங்கை ரூபாய்) ஆகும்.
அவரது தந்தை தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் மகளின் படிப்பிற்காகச் செலவிட்டுள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறை பிரபலம் என்பதால், லண்டனில் பட்டம் பெற்ற பிறகு தனது தாய்நாட்டில் உயர்மட்டப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதே நவோத்யாவின் திட்டமாக இருந்தது.
நவோத்யா 2024 அக்டோபரில் தனது படிப்பைத் தொடங்கி, முதலாம் ஆண்டை வெற்றிகரமாக முடித்தார். இரண்டாம் ஆண்டிற்கான முதல் தவணை கட்டணமான 8,000 பவுண்டுகளைச் செலுத்த 2025 அக்டோபர் 6 கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அவர் அக்டோபர் 3-ஆம் தேதியே பணத்தைப் பரிமாற்றம் செய்துவிட்டார்.
ஆனால், வங்கிச் செயல்முறையில் ஏற்பட்ட தாமதத்தினால், அந்தப் பணம் அக்டோபர் 7-ஆம் தேதியே பல்கலைக்கழகத்தின் கணக்கிற்குச் சென்றடைந்தது. அதாவது கடைசித் தேதிக்கு ஒரு நாள் கழித்து பணம் கிடைத்துள்ளது.
இதனைப் பல்கலைக்கழகம் உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு (Home Office) முறைப்பாடு செய்தது. இதன் விளைவாக, அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்டு, அவர் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“பிரித்தானியா உலகின் சிறந்த கல்வி மையங்களில் ஒன்று என்பதால் இங்கு படிக்க வந்தேன். நான் எனது கடமையைச் சரியாகச் செய்தேன், காலக்கெடுவுக்கு முன்பே பணத்தை அனுப்பினேன். வங்கி முறையில் ஏற்பட்ட தாமதம் எனது கட்டுப்பாட்டில் இல்லை,” என்று நவோத்யா கூறுகிறார்.
“நான் அனைத்து வகுப்புகளுக்கும் சென்றேன், அதிக மதிப்பெண்களைப் பெற்றேன். தந்தையின் வாழ்நாள் சேமிப்பையும் இழந்து, பட்டம் இல்லாமல் இலங்கை திரும்பினால் எனது வாழ்க்கை பாழாகிவிடும். ஒரு நாள் தாமதத்திற்காக இவ்வளவு கடுமையான முடிவு எடுப்பது மிகவும் அநீதியானது,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மாணவியின் சட்டத்தரணி நாகா கந்தையா (Naga Kandiah) கூறுகையில், “ஒரு நாள் தாமதத்திற்காகப் பல்கலைக்கழகம் இவ்வாறு முறைப்பாடு செய்து அவரது விசாவைக் குறுக்கியது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.
கொவென்ட்ரி பல்கலைக்கழகப் பேச்சாளர் கூறுகையில், தனிப்பட்ட வழக்குகள் குறித்துப் பேச முடியாது என்றும், ஆனால் மாணவர்கள் கட்டணம் செலுத்த 6 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். “நாங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானிய உள்துறை அமைச்சகம் இது குறித்துக் கூறுகையில், “இது விண்ணப்பதாரருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான விவகாரம். பல்கலைக்கழகம் அறிவித்தால் மட்டுமே நாங்கள் விசாவை ரத்து செய்வோம்,” எனத் தெரிவித்துள்ளது.
நவோத்யா தற்போது மேலதிக காலம் தங்கியிருப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டு உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர் கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்.