கோவை:
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி பரபரப்பு புகார் எழுப்பியது மாமன்ற அரங்கில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
கூட்டத்தின் தொடக்கத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு, ஊழல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோஷமிட்டனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், மாமன்றக் கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதே சமயம், குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்களும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்களும் தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய அசாதாரண சூழலால், மாமன்றக் கூட்டம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மாமன்ற மாண்பை மீறியதாகக் கூறி, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை 2 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.
மீண்டும் மதியம் 12 மணிக்குக் கூட்டம் தொடங்கிய போது, 130-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்ட அரங்கில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
#Coimbatore #CorporationMeeting #Congress #DMK #CorruptionAllegation #MayorRanganayaki #TamilNaduPolitics #BreakingNews #BMNews #LocalBodyPolitics #CityCouncil #CivicIssue #PoliticalUpdate #TamilNews #Governance #Administration #CoimbatoreNews #TamilNaduNews #PoliticalDispute #PublicWelfare