வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிராம்ப்டனைச் சேர்ந்த நபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளனர்.
ஹம்பர்வுட் (Humberwood) மற்றும் ரெக்ஸ்டேல் (Rexdale) வீதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் காலை 7 மணிக்குச் சற்றுப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேகநபரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த போது, சந்தேகநபர் அந்தப் பெண்ணை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற அவசர மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் டொராண்டோவைச் சேர்ந்த 26 வயதான நவ்னீத் கவுர் (Navneet Kaur) என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு முன்பே சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையைத் தொடர்ந்து, ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) சந்தேகநபரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பிராம்ப்டனைச் சேர்ந்த 37 வயதான சர்ன்ஜீத் சிங் (Sharnjeet Singh) என்பவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் மற்றும் நீதிமன்றப் பிணை நிபந்தனைகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் சனிக்கிழமை காலை டொராண்டோவில் உள்ள ஒன்ராறியோ நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, கடமை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury), அந்தப் பெண் குறிப்பிட்ட இலக்காகக் கொண்டு தாக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நம்புவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மேலதிக ஆபத்து எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
“இது ஒரு குறிப்பிட்ட நபரைக் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட உள்ளூர்ச் சம்பவம் என்பதால், அப்பகுதி மக்களுக்கு எந்தவித கூடுதல் ஆபத்தும் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்,” என பிராட்பரி தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்கு அருகில் காபி குடித்துக்கொண்டிருந்த சாட்சி ஒருவர் CP24 ஊடகத்திற்கு வாக்குமூலம் அளிக்கையில், நபர் ஒருவர் அப்பெண்ணை அணுகி சிறிது நேரம் பேசிய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டதாகக் கூறினார்.
“ஒரு நபர் அந்தப் பெண்ணுடன் சுமார் 30 வினாடிகள் பேசுவதைப் பார்த்தேன்… பின்னர் அவர் அப்பெண்ணைச் சுட்டுவிட்டு, நெடுஞ்சாலை 427 இன் தெற்கு நோக்கி நடந்து சென்றார், அதைத்தான் நான் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அந்தச் சாட்சி, இச்சம்பவம் அப்பகுதியில் தனது பாதுகாப்பு உணர்வை உலுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். “நான் இங்கு சுமார் ஆறு, ஏழு வருடங்களாக வாழ்கிறேன்… இங்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தேன், ஆனால் இப்போது அப்படி பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றவில்லை,” என்று அவர் கூறினார்.
டொராண்டோவில் 2026 ஆம் ஆண்டில் பதிவான 22 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும் என்று பொலிஸாரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிகத் தகவல்கள் தெரிந்தவர்கள் யாராயினும் டொராண்டோ பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.