செயின்ட் ஜோன் நதியிலிருந்து 68 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் ‘லாங் ரீச்’ (Long Reach) பகுதிக்கு அருகில் உள்ள செயின்ட் ஜோன் நதியில், திங்கட்கிழமை கனு (Canoe) ரக சிறிய படகில் சென்ற செயின்ட் ஜோன் நகரைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில், கனடிய கடலோர காவல்படையினரால் (Canadian Coast Guard) அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன படகோட்டியைத் தேடும் பணிகளுக்கு உதவுமாறு செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணிக்கு முன்னதாக பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ராயல் கனடியன் மவுண்டெட் பொலிஸின் (RCMP) சார்ஜன்ட் பென் காம்லி தெரிவித்தார். இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (JRCC), பல்வேறு தீயணைப்புத் திணைக்களங்கள் மற்றும் செயின்ட் ஜோன் பொலிஸ் தடயவியல் பிரிவினர் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து செயல்பட்டதாக காம்லி CTV நியூஸ் அட்லாண்டிக் ஊடகத்திற்குத் தெரிவித்தார்.
“செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில், கிங்ஸ்டன் தீபகற்பத்தில் (Kingston Peninsula) உள்ள லாங் ரீச் பகுதியில் உயிரிழந்தவரின் வாகனத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்” என்று காம்லி கூறினார். “அவரது மரணத்திற்கான காரணம் மரண பரிசோதகரின் (Coroner) விசாரணை மற்றும் முடிவுக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த படகோட்டி திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக முதன்முதலில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக காம்லி தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணம் தற்போது வெளியிடப்படாத போதிலும், இந்த மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்கிடமான பின்னணியும் (Foul play) இல்லை என சார்ஜன்ட் காம்லி மேலும் தெரிவித்துள்ளார்