நகரத்தின் வடக்கு முனையில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேக நபர் தனது அடையாள அட்டையைத் (Identification) தவறவிட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, குயெல்ப் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொள்ளை மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் ‘வூட்லான் வீதி மற்றும் வூல்விச் வீதி’ (Woodlawn Road and Woolwich Street) சந்திப்பிற்கு அருகில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பு வந்ததை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குயெல்ப் காவல்துறை தெரிவித்துள்ளது.
“ஒரு பெண் அந்த வணிக நிறுவனத்திற்குள் நுழைந்து, பல பொருட்களை ஒரு பையினுள் போட்டுள்ளார். அவர் அதற்கான பணத்தைச் செலுத்தாமல் வெளியேற முயன்றபோது, ஊழியர் ஒருவர் அவரது வழியை மறித்துள்ளார்,” என்று காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இதனையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதன் போது சந்தேக நபர் அந்த ஊழியரைக் கடிக்க முயன்றுள்ளார். இந்த மோதலின் போது அந்தப் பெண் தனது அடையாள அட்டை உட்படப் பல பொருட்களைத் கீழே தவறவிட்டுள்ளார்.”
இதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது, அருகில் உள்ள மற்றொரு வணிக நிறுவனத்திலிருந்து திருடப்பட்டதாகக் கருதப்படும் பொருட்களும் மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், குயெல்ப் நகரைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவருக்கு எதிராகக் கொள்ளைச் சம்பவம் மற்றும் 5,000 டாலருக்கும் குறைவான திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை (Possession of property obtained by crime under $5,000) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.