அரசாங்கத்தின் தேசிய கனிமக் கொள்கை (National Mineral Policy) மற்றும் கனிம அகழ்வாராய்ச்சி, சுரங்க அகழ்வுக்கான உரிமங்கள் (Licences) வழங்கப்படுவது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் பலத்த கவலைகளை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கையின் கனிம வளங்களை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள், பின்னர் அந்த உரிமங்களைப் பயன்படுத்தி மூலதனத்தை திரட்டியுள்ளனவா (Raise capital), முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனவா, தங்களது பங்குகளின் உரிமைகளை மாற்றியுள்ளனவா அல்லது வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு செய்திருந்தால், அதன் மூலம் இலங்கைக்குக் கிடைத்த நன்மைகள் மிகக் குறைவே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்த கனிம அகழ்வுகள் மூலம் அரசுக்குக் கிடைத்த ராயல்டி வருமானம் (Royalty income), சுரங்கத் திட்டங்களுக்காக நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் (Environmental assessments), நிலுவையிலுள்ள உரிம விண்ணப்பங்கள் மற்றும் வாகரை, திருக்கோவில், அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினரால் எழுப்பப்பட்டுள்ள கவலைகள் குறித்தும் அவர் அமைச்சரிடம் தெளிவுபடுத்தல்களைக் கோரினார்.
நாடாளுமன்ற அமர்வின் போது விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் இதற்கு உடனடிப் பதில்களை வழங்க முடியாமல் போனதாகவும், பதிலளிப்பதற்கு அவர் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் உரிமங்களை வழங்குவதற்கு முன்னர், இலங்கையின் கனிம வளங்களால் உண்மையில் பயன்பெறுவது யார் என்பது குறித்தும், இதன் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் உள்ளூர் சமூகங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளை நியாயப்படுத்துகின்றனவா என்பது குறித்தும் அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு என சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.