குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக நடத்தப்படுவதாகவும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சல்லேயின் தடுப்புக்காவல் அறையின் இடவசதி குறைவு மற்றும் மோசமான நிலைமைகள் குறித்து அவரது மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
சிஐடி-யில் (CID) உள்ள தடுப்புக் காவல் வசதிகள் புதியதாகக் கட்டப்பட்டவை அல்ல என்றும், அல்லது 2024 செப்டம்பருக்குப் பின்னர் சுரேஷ் சல்லேக்காக பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்டவை அல்ல என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அந்த விசாலமான அறையில், கடந்த காலங்களிலும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் பல கைதிகள் எவ்வித புகார்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். சலே விவகாரத்தில் நிலையான சட்ட நடைமுறைகளே பின்பற்றப்படுவதாகவும், கைதிகளை நிர்வகிக்கும் வழக்கமான விதிகளின்படியே அவர் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
சலேயின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவரது உயிருக்கு ஆபத்தான உடல்நிலை குறித்த கவலைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, சலே வாய் வழியே உண்பதை மறுத்து வருகின்ற போதிலும், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றார்.
“சுரேஷ் சக்கு உணவு மறுக்கப்படவில்லை, மாறாக அவர்தான் வாய் வழியே அதனை உட்கொள்ள மறுக்கிறார். ஒரு மருத்துவர் என்ற ரீதியில் என்னால் கூற முடியும், ஒருவர் 16 நாட்களாக முழுமையாக உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறப்பட்டால், அங்கு கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் தாராளமாக நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார், மேலும் மூக்குக் குழாய் (Nasogastric Tube) மூலம் நேரடியாக அவரது வயிற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது மனைவி வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவு கூட இந்த என்ஜி (NG) குழாய் மூலமாகவே அவரது வயிற்றுக்கு அனுப்பப்படுகிறது. அந்த உணவின் அளவு போதாது என்று அவர்கள் கருதினால், அவரது மனைவி இன்னும் கூடுதலான உணவைக் கொண்டு வர முடியும். அவரது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை,” என்று அமைச்சர் கூறினார்.
சலே உணவு உட்கொள்ள மறுப்பது குறித்து வெளியில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஊடக சந்திப்புகள் மற்றும் மத வழிபாடுகளை விமர்சித்த அமைச்சரவை பேச்சாளர், இதற்கான தீர்வு ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் இல்லை என்றும், அவர் வழக்கம்போல உணவு உண்பதற்கு அவரது குடும்பத்தினரே அவரை வற்புறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் நடந்த ஒரு கொடூரமான குற்றச் செயல் குறித்து சிஐடி (CID) தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக இந்த தற்போதைய குற்றவியல் விசாரணை செயல்முறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே சல்லேயின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்