மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுக் கொள்வனவனவு வாடிகளின் உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே கடலுணவுக் கொள்வனவாளர்களால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக படகுத்துறைப்பகுதியில் கடந்த 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலுணவுகளைக் கொள்வனவு செய்வதற்கென வாடிகள் அமைக்கப்பட்டு, கடலுணவுக் கொள்வனவுச் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றுவந்துள்ளன.
இத்தகையசூழலில் கடந்த யுத்த சூழல் காரணமாக அந்தப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, குறித்த இரு கடலுணவுக் கொள்வனவாளர்களுக்குரிய வாடி அமைந்திருந்த பகுதி கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததுடன், அந்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளையும் கடற்படையினர் பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் குறித் கடலுணவு கொள்வனவு வாடிகளை விடுவிக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்தபோதும், அந்தவாடிகளை விடுவிப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதேவேளை தற்போது படகுத்துறைப்பகுதியில் 150இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்குச் சென்றுவருவதாக கடலுணவு கொள்வனவாளர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு கடற்படையினால் கடலுணவுக் கொள்வனவு வாடிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலாளர்களிடமிருந்து கடலுணவுகளைக் கொள்வனவுசெய்வதில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது கடலுணவுக் கொள்வனவாளர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்யப்பட்டது.
எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது கடலுணவுக் கொள்வனவு வாடிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடலுணவுக் கொள்வனவாளர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளை விடுவிப்பதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.