கடந்த மாதம் ஒன்டாரியோவின் ஸ்குகாக் (Scugog) பகுதியில் உள்ள பூங்காவொன்றில் மனிதர் ஒருவரை வழிமறித்து (Ambushed), கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) மேற்கொண்ட விசாரணையின்படி, கடந்த மே 13ஆம் தேதி மாலை, பாதிக்கப்பட்ட நபர் தனக்குத் தெரிந்த பெண் ஒருவரால் வாட்டர் மற்றும் மேரி வீதிகளுக்கு (Water and Mary streets) அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணும் மற்றொரு ஆண் சந்தேக நபரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபரைத் திட்டமிட்டு வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
அப்போது, அந்த ஆண் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைப் பலமுறை கத்தியால் குத்தியதுடன், அவரை ஒரு வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றவும் முயன்றுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் தற்காப்புக்காகப் போராடித் தப்பியதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரும் அவ்விடத்திலிருந்து உடனடியாக காரில் தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலத்த காயங்களுடன் இருந்த பாதிக்கப்பட்ட நபரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் டொராண்டோ பகுதியில் உள்ள அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma centre) அனுப்பி வைத்தனர்.
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜேம்ஸ் லீ ஹேஸ்டிங்ஸ் (James Leigh Hastings – 36) மற்றும் ஷானன் லோயிஸ் மார்ஜோரி கோ (Shannon Lois Marjorie Khoe – 51) ஆகிய இரு சந்தேக நபர்களும் கடந்த வாரம் டொராண்டோவில் வைத்து எவ்வித எதிர்ப்புமின்றி கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.
இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி (Attempted murder), கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல் (Aggravated assault) மற்றும் சட்டவிரோதமாகக் சிறைப்படுத்துதல் (Forcible confinement) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தமை, பிணை உத்தரவை மீறியமை மற்றும் நன்னடத்தை விதியை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் ஹேஸ்டிங்ஸ் மீது கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.