பிராம்ப்டன் (Brampton) நகரத்தின் சின்குவாகுசி பூங்காவில் (Chinguacousy Park) நடைபெறவுள்ள கனடா தினக் (Canada Day) கொண்டாட்டங்களில் பங்கேற்க வரும் பொதுமக்கள் கொண்டு வரும் பைகள் (Bags) தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பட்டாசுகளுடன் எவரும் பூங்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி நடைபெறவுள்ள இக்கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்புத் திட்டங்களை வெளியிடுவதற்காக, நகர அதிகாரிகளும் பீல் பிராந்திய காவல்துறையும் (Peel Regional Police) திங்கள்கிழமை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அன்று இரவு 10 மணிக்கு அதிகாரப்பூர்வ பட்டாசு வேடிக்கை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
கடந்த விக்டோரியா தின (Victoria Day) நீண்ட வார இறுதி விடுமுறையின் போது, பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் மீது பட்டாசுகளைக் கொளுத்தி எறிந்த பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் சில வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களிலும் பரவியிருந்தன.
கடந்த மே 18 அன்று, இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு பூங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அவர்களில் சிலர் மீது ஆயுதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“கனடா தினம் உள்ளிட்ட ஒவ்வொரு பெரிய நிகழ்வைப் போலவே, இப்போதும் சாத்தியமான அச்சுறுத்தல்களை உளவுத் தகவல் அடிப்படையிலான காவல் முறையின் (Intelligence-led policing) மூலம் நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தேவைப்படும்போது எங்கள் அதிகாரிகளையும் வளங்களையும் களமிறக்குவதற்கான விரிவான திட்டங்களை வைத்துள்ளோம்” என பீல் பிராந்திய காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் ஹியூபர்ட் ஹில்ட்ஸ் (Hubert Hiltz) தெரிவித்தார்.
மேலும், குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் பிராமிலி ரோட்டிற்கு அருகில் அமைந்துள்ள சின்குவாகுசி பூங்காவிற்கு பட்டாசுகளைக் கொண்டுவரத் திட்டமிடும் எவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்தார். பிராம்ப்டன் நகர எல்லைக்குள் பொதுமக்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கைவசம் வைத்திருப்பது மற்றும் வெடிப்பது ஆகியவை ஏற்கனவே முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“காவல்துறையின் பார்வையில், இது வெறும் ஒரு நகராட்சி விதிமுறை (Bylaw) சார்ந்தது மட்டுமல்ல. இது குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் ஒரு குற்றவியல் நடத்தை ஆகும்” என்று ஹில்ட்ஸ் குறிப்பிட்டார். “எங்கள் செய்தி மிகவும் தெளிவானது. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பட்டாசுகளைப் பயன்படுத்தி நீங்கள் சிக்கினால், உடனடியாகக் கைது செய்யப்பட்டு உரிய குற்றவியல் வழக்குகள் பதியப்படும்.”
கனடா தினத்தன்று பூங்காவில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதுடன், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும், ஏராளமான காவல் துறையினர் களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் ஹில்ட்ஸ் மேலும் தெரிவித்தார்.
மேயரின் கருத்து மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்
விக்டோரியா தினச் சம்பவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்தி, கனடா தினக் கொண்டாட்டங்கள் குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பானதாக அமைவதை நகர அதிகாரிகளும் காவல்துறையும் உறுதி செய்வார்கள் என பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்தார்.
“துரதிர்ஷ்டவசமாக, விக்டோரியா தினத்தன்று சில இளைஞர்களால் மிகவும் பொறுப்பற்ற முறையில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் தங்கள் செயல்களை எண்ணி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களில் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என மேயர் குறிப்பிட்டார். “பட்டாசுகளைத் தவறாகப் பயன்படுத்தினால் அது மிகவும் ஆபத்தானதாக முடியும். எனவே எவ்வித பாதுகாப்பு ஆபத்துகளும் ஏற்படாத வண்ணம் நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.”
கனடா தினத்தன்று பூங்காவிற்கு வருவதற்கு பொதுமக்கள் நடைபயணம், மிதிவண்டி அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்காக ‘பிராம்ப்டன் ட்ரான்சிட்’ (Brampton Transit) நிறுவனம் பின்வரும் நான்கு முக்கிய இடங்களில் இருந்து இலவசப் பேருந்து (Shuttle) சேவைகளை வழங்கவுள்ளது: