யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்று (02) இரவு மற்றும் இன்று காலை விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச சபைத் தவிசாளரின் நேரடி அறிவுறுத்தலுக்கு இணங்க, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வந்த நான்கு நடமாடும் விற்பனை வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட குறித்த வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தவிசாளர், “பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது. உணவகங்கள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்கள் சுகாதார விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறான திடீர் சோதனைகள் இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.