யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அதன்படி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொலிஸாரை கண்டதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் அதனை வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டான்.
இதனை உடனே கவனித்த பொலிஸார் விரைவாக செயல்பட்டு மற்றொரு பொட்டலத்தை மீட்டதுடன், இளைஞனை கைது செய்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தற்போது அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனிடம் போதைப்பொருளை வாங்கியவர்கள் மற்றும் அவருக்கு வழங்கியவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.