மொன்றியால் (Montreal) மதுபானசாலைகளில் சந்தித்த நான்கு பெண்களுக்கு, அவர்களின் அனுமதியின்றி போதைப்பொருள் கொடுத்து, பின்னர் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக மொன்றியால் காவல்துறை தெரிவித்துள்ளது.
2025 ஆகஸ்ட் மற்றும் 2026 ஜனவரிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறும் காவல்துறை, குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த பெண்களை மொன்றியாலில் உள்ள பல்வேறு மதுபானசாலைகளில் (Bars) சந்தித்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
29 வயதுடைய ஜான்-பிலிப் உப்தா (Jean-Philippe Oubda) என்ற நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதுடன், பாலியல் வன்கொடுமை, தீங்கு விளைவிக்கும் பொருளை உட்கொள்ளச் செய்தல் மற்றும் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட வேறு சில பெண்களும் இருக்கக்கூடும் என புலனாய்வாளர்கள் நம்புவதால், காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அவரது மூன்று புகைப்படங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் மதுபானசாலைகளில் அந்தப் பெண்களை அணுகி, பின்னர் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வைத்தே இந்த வன்கொடுமைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
உப்தா மாநிறம் கொண்டவர் (Dark complexion) மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுடன் பிரெஞ்சு மொழியில் பேசியுள்ளார். அவர் ஐந்து அடி ஆறு அங்குல உயரமும், சுமார் 143 பவுண்டுகள் எடையும் கொண்டவர், அத்துடன் பழுப்பு நிறக் கண்களையும் பழுப்பு நிற முடியையும் உடையவர்.
குற்றம் சாட்டப்பட்ட இந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்த சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகள் யாரேனும் இருந்தால், உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்குமாறும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறும் அல்லது காவல்துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்புப் பிரிவை 514-280-8502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ‘இன்ஃபோ-க்ரைம் மொன்றியால்’ (Info-Crime Montreal) அமைப்பை 514 393-1133 என்ற எண்ணில் அல்லது இணையதளம் வழியாகத் தொடர்பு கொண்டு தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அநாமதேயமாகவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.