சென்னை:
“சட்டமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தூது அனுப்பியும், கூட்டணி பேச வந்தவர்களை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உதாசீனப்படுத்தினார்; இதனால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், அதிமுக சிறப்புப் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான கெடு விதித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக-வில் வரலாறு காணாத பிளவு ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு பலமான அணி தனித்துப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த அதே வேளையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தனது அலுவலகத்தில் சி.வி.சண்முகம் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.காமராஜ், காங்கேயம் நடராஜன் உள்ளிட்ட முக்கியச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைப் போக்கைக் கடுமையாகச் சாடிப் பேசினார். அவர் கூறியதாவது: “நடந்து முடிந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக மீண்டும் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே எடப்பாடியைச் சந்தித்து, பிரிந்து சென்றவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான அதிமுகவை முன்னெடுப்போம் எனக் கூறினோம். ஆனால், அவர் அதைத் தலைக்கனத்துடன் நிராகரித்தார்.
தேர்தலில் வெற்றி பெறத் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள்தான் சொன்னோம். தவெக தரப்பிலும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்கள். ஆனால், கூட்டணி பேச வந்தவர்களை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தித் துரத்தினார். தவெக மட்டுமல்லாமல் தேமுதிக, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோரையும் அரவணைக்காமல், தான் மட்டும் பொதுச்செயலாளராக நீடித்தால் போதும் என்ற சுயநலத்தில் அவர் செயல்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் எந்தப் பதவியும் வேண்டாம், சாதாரண உறுப்பினராக இருக்கிறேன் என்று சொல்லியும் எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல, தவறு செய்தவர்கள் திரும்பி வந்தால் ஏற்போம் என நாடகமாடுகிறார். எல்லாவற்றையும் அவரே செய்துவிட்டு, இப்போது எங்களை துரோகிகள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
அதிமுகவின் சட்ட விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு (1/5) பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்தால், அடுத்த 30 நாட்களுக்குள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்குப் பயந்து கொண்டு பொதுக்குழுவைக் கூட்டத் தேவையில்லை எனத் தவறான சுற்றறிக்கை அனுப்புகிறார். தங்களுக்கு ஆதரவாகக் கையெழுத்துப் போட மறுக்கும் நிர்வாகிகளை மிரட்டி, இதுவரை 31 மாவட்டச் செயலாளர்களைக் கட்சியை விட்டுச் சட்டவிரோதமாக நீக்கியுள்ளார். அவர் எங்களை நீக்கியது செல்லாது. எடப்பாடி பழனிசாமிக்குத் துணிச்சல் இருந்தால் உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அந்தப் பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று காரசாரமாகப் பேசினார். சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடிப் பேட்டி, அதிமுக-வின் அதிகாரப்பூர்வப் பிளவை உறுதி செய்துள்ளதுடன், தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#CVShanmugamSpeech #ADMK_Crisis #VelumaniVsEPS #BreakingNews #May19 #GeneralCouncilADMK #ADMK_VsTVK #ThalapathyVijay #TVK_Government #NewGovernmentTN #EpsBetrayal #OPS_Factor #AllianceIssues2026 #DravidianPolitics #AIADMK_Split #PoliticalSensations #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`