போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, மகா சங்கத்தினரின் தலைமையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்களிப்புடன் நேற்று(28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எனவே போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாட்டை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக புதியதொரு மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் வேலைத்திட்டத்தில், சம்புத்த சாசனத்தையும் அதனுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை மற்றும் விசாரணை செயல்முறை குறித்து பொலிஸ் மா அதிபர் இங்கு விளக்கமளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஏற்கனவே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதனை ஒட்டுமொத்த சங்க சமூகத்தின் செய்தியாகக் கருதி செயற்படுமாறு மகா சங்கத்தினர் அரசாங்கத்திடமும் மக்களிடமும் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், தற்போதைய போக்குகளுக்கு மத்தியில் சங்க சமூகத்தைப் பாதுகாப்பது பிக்குகளால் மாத்திரம் செய்யக்கூடிய காரியமல்ல என்றும், அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சம்புத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் (நம்பிக்கை பொறுப்பு) சட்டம் போன்ற சட்டங்களைத் திருத்துவது மற்றும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.