காசாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணியில் (Gaza flotilla) பயணித்து, இஸ்ரேலினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை ஏளனம் செய்யும் வகையிலான வீடியோ ஒன்றை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய தூதுவரை நேரில் அழைத்து (Summon) தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இந்த விபரங்களை வெளியிட்டார்.
“இதாமர் பென்-க்வீர் பகிர்ந்த வீடியோ உட்பட நாங்கள் பார்த்த காட்சிகள் யாவும் ஆழ்ந்த கவலையளிப்பதுடன், எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“இது நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் ஒரு விவகாரமாகும். இது பொதுமக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் தொடர்புடையது. எனவே, நாங்கள் இவ்விடயத்தில் மிக அவசரமாகவும் உன்னிப்பாகவும் செயல்பட்டு வருகிறோம் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகளால் மறிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்ட நிவாரணக் கப்பலில் இருந்த இந்தச் செயற்பாட்டாளர்கள், பின்னர் இஸ்ரேலியத் துறைமுகமொன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.