கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) கடற்கரையில் 10 பேருடன் பயணித்த விசேட வாடகைச் சுற்றுலாப் படகு (Charter boat) ஒன்று கடலில் மூழ்கியதில், 4 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், எஞ்சிய 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை ரிச்மண்ட் (Richmond) நகருக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, சம்பவ இடத்திற்கு அருகில் தங்களது சொந்த பாய்மரப் படகில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர், உடனடியாகச் செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் மீட்பாளர்களாக மாறியுள்ளனர்.
விமானப் பணிப் பயிற்சியால் உயிர்பிழைத்தவர்கள்: கடந்த 30 வருடங்களாக இப்பகுதியில் பாய்மரப் படகோட்டி வரும் பிரையன் அங்கஸ் (Brian Angus) மற்றும் டோரதி ஸ்டாஃபர் (Dorothy Stauffer) ஆகிய தம்பதியினரே இந்த துணிகர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மனிதர்கள் தத்தளிப்பதைக் கண்டவுடன், உடனடியாகத் தங்களது பாய்மரங்களைச் சுருட்டிவிட்டு, படகுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய ரப்பர் மிதவைப்படகு (Dinghy) மூலம் அவர்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.
“அவர்கள் எவரும் உயிர்காப்பு அங்கிகளை (Life jackets) அணிந்திருக்கவில்லை. தங்களை அறியாமலேயே தண்ணீரில் மூழ்கும் ஆபத்தான நிலையில் (Hypothermic) இருந்தனர்” என டோரதி தெரிவித்தார். ஓய்வுபெற்ற ‘எயார் கனடா’ (Air Canada) விமானியான பிரையன் அவசர உதவிக்கான ‘மேடே’ (Mayday) சிக்னலை அனுப்பிய அதேவேளை, அவரது மனைவியான டோரதி (தற்போது எயார் கனடாவில் சேவை இயக்குநராகப் பணிபுரிபவர்) தங்களுக்கு விமான சேவையில் வழங்கப்பட்ட அவசரக்காலப் பயிற்சியைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்துள்ளார்.
“விமானப் பணியில் எங்களுக்கு ‘மதிப்பீடு செய்தல், மாற்றியமைத்தல், செயல்படுதல்’ (Assess, adapt, act) என்ற மூன்று விதிகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சியே இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்து மூவரைக் காப்பாற்ற எனக்கு உதவியது; இதை என் வாழ்வில் மறக்கவே முடியாது” என டோரதி மேலும் குறிப்பிட்டார்.
கைவிடப்பட்ட தேடுதல் நடவடிக்கை: தகவல் கிடைத்த 18 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல்படையின் ஹோவர்கிராஃப்ட் (Hovercraft) மிதவைவூர்தி, தம்பதியினரால் மீட்கப்பட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 4 பேரை கரைக்குக் கொண்டு சேர்த்தது.
இந்த தம்பதியினரின் விரைவான நடவடிக்கை மற்றும் உடனடித் தகவல் பரிமாற்றம் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியதாகக் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (JRCC) அதிகாரி மேஜர் கிரெக் கிளார்க் பாராட்டியுள்ளார்.
கடலில் எஞ்சியவர்களைக் கண்டறிய சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும், மோசமான கடல் சீற்றம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9:45 மணியளவில் தேடுதல் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டன. காணாமல் போன எஞ்சிய 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ரிச்மண்ட் பொலிஸார் (RCMP) திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.