நோவா ஸ்கோஷியா, ஜூலை 22: கனடாவின் நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மாகாணத்தில் பொலிஸாாரின் சமிக்ஞையை மீறி அதிவேகமாகச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸ் கண்காணிப்புக் குழுவான SiRT தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் விசேட ரோந்து நடவடிக்கையில் ‘ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ்’ (RCMP) அதிகாரி ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹாவ்ரே புஷே (Havre Boucher) பகுதியில் உள்ள கேப் ஜாக் வீதியில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி சமிக்ஞை செய்தபோதிலும், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸாரின் விளக்கம்: “பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் அதிகாரி அவசரகால விளக்குகளை அணைத்துவிட்டு, அவ்வாகனத்தைத் தொடர்வதைத் தவிர்த்தார். இருப்பினும், சிறிது நேரத்தில் அந்த வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதை அதிகாரி அவதானித்தார்” என RCMP பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவக் குழுவினர் வரும் வரை பொலிஸ் அதிகாரி முதலுதவி அளித்தபோதிலும், காரை ஓட்டிச் சென்ற 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. காரில் வேறு எவரும் பயணிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நோவா ஸ்கோஷியாவின் ‘தீவிர சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்குழுவிடம்’ (Serious Incident Response Team – SiRT) ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் சம்பந்தப்பட்ட இதுபோன்ற தீவிர சம்பவங்கள் குறித்து சுயாதீனமாக விசாரிக்கும் பொறுப்பு SiRT அமைப்பிற்கு உரித்தானதாகும்.