டொராண்டோ (CP24): கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் (GTA) அரங்கேறி வரும் மிரட்டிப் பணம் பறிக்கும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய டஜன் கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக நாடுகடத்தல் உத்தரவு (Removal orders) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குடியேற்ற அமலாக்க வழக்குகளைக் கண்காணிக்கும் விசேட தீவிர அதிரடித் திட்டம் கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் (Fall 2025) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து CBSA விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தீவிரமடையும் குடியேற்றக் கண்காணிப்பு மற்றும் நாடுகடத்தல்கள்:
மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றங்களுடன் சாத்தியமான தொடர்புகளைக் கொண்ட குடியேற்ற வழக்குகளைக் கூர்ந்து கவனிக்கும் இந்த விசேட அணுகுமுறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பசிபிக் (Pacific) மற்றும் பிரெய்ரி (Prairie) பிராந்தியங்களில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், கடந்த நவம்பர் மாதம் முதல் இது டொராண்டோ பெருநகரப் பகுதிக்கும் (GTA) விரிவுபடுத்தப்பட்டது.
பொலிஸ் திணைக்களங்களுடனான ஒருங்கிணைந்த முயற்சிகள், பொதுமக்களின் தகவல்கள் மற்றும் CBSA இன் சொந்தப் புலனாய்வு விசாரணைகள் மூலம் இவ்வாறான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டொராண்டோ பகுதித் தரவுகள்:
-
விசாரணைகள்: டொராண்டோ பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 200 குடியேற்றப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
நாடுகடத்தல் உத்தரவுகள்: இதில் 33 நபர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக நாடுகடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
-
ஏற்கனவே நாடுகடத்தப்பட்டவர்கள்: 2025 நவம்பர் நிலவரப்படி, டொராண்டோ பகுதியைச் சேர்ந்த 17 பேர் ஏற்கனவே கனடாவை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“குற்றவாளிகளுக்கு இங்கு இடமில்லை” – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
இது குறித்துக் கனடாவின் கூட்டாட்சி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் (Federal Public Safety Minister) கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) விடுத்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில்:
“கனடியர்கள் தங்களது வீடுகள், பணியிடங்கள் மற்றும் சமூகங்களில் பாதுகாப்பாக வாழ தகுதியுடையவர்கள். மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற பெருகிவரும் சர்வதேசக் குற்றவியல் அச்சுறுத்தல்களுக்கு முன்னால் அரசாங்கம் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதன் மூலமும், மற்றவர்களைச் சுரண்டும் அல்லது ஆபத்துக்குள்ளாக்கும் நபர்களைக் கணக்கிற்குள் கொண்டுவருவதன் மூலமும் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதில், குற்றவாளிகள் மற்றும் இங்கு தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத நபர்களை நாட்டிலிருந்து அகற்றுவதும் (Removing criminals) அடங்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா தழுவிய ரீதியில் விடுக்கப்பட்ட ஏனைய தரவுகள்:
டொராண்டோவுக்கு வெளியேயும் கிட்டத்தட்ட 300 குடியேற்ற விசாரணைகள் பதியப்பட்டுள்ளன. பசிபிக் பிராந்தியத்தில் 150 வழக்குகள் பதியப்பட்டு, 69 நாடுகடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 46 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரெய்ரி பிராந்தியத்தில் 138 வழக்குகள் பதியப்பட்டு, 37 நாடுகடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 18 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டொராண்டோ பகுதி முழுவதும் உள்ள பொலிஸ் பிரிவினர் மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சிகளின் அதிகரிப்பு குறித்து நீண்டகாலமாகக் கவலை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக, கடந்த மே மாதம் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) தெற்காசிய வணிக சமூகத்தினரை (South Asian business community) இலக்கு வைத்து வன்முறை ரீதியில் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் 17 பேரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.