ஒட்டாவா (CTV News Ottawa): கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இரவு மூனிஸ் பே பூங்காவில் (Mooney’s Bay Park) இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸ் சேவை (Ottawa Police Service) இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது.
அன்று இரவு பூங்காவில் ஏற்பட்ட மோதலின் போது, 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் (Critical condition) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேநேரம், 16 வயதுடைய சிறுமி ஒருவர் சிறிய வெட்டுக் காயங்களுடன் நிலையான ஆரோக்கிய நிலையில் (Stable condition) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்:
இச்சம்பவம் நடந்த அடுத்த நாள் ஒட்டாவா பொலிஸ் பரிசோதகர் ஜேமி ஹார்பர் (Insp. Jamie Harper) ஊடகங்களுக்கு விபரித்த போது, மோதல் நடந்த சமயத்தில் பூங்காவில் சுமார் 20 இளைஞர்கள் குழுமியிருந்ததாகவும், அங்கிருந்த காணொளிப் பதிவுகளை (Video footage) ஆராய்ந்ததில் இந்தத் தாக்குதல் தற்செயலாக நடக்காமல், திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு (Targeted) நடத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சிறுவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
தீவிர புலனாய்வு விசாரணைகளை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள இரு சிறுவர்கள் மீதும் பின்வரும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன:
-
16 வயதுச் சிறுவன்: இரண்டு கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுகள் (Aggravated assault), ஆயுதத்தைக் கொண்டு தாக்கியமைக்கான இரண்டு குற்றச்சாட்டுகள், மறைத்து வைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்துச் சென்றமை மற்றும் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தமை.
-
15 வயதுச் சிறுவன்: ஆயுதத்தைக் கொண்டு தாக்கியமை மற்றும் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தமை.
சட்டப் பாதுகாப்பு: கனடாவின் இளங்குற்றவாளிகள் நீதிக்கான சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ், குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருமே 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெயர்களையோ அல்லது அடையாளங்களையோ வெளியிட பொலிஸாருக்குச் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது