கடந்த 2025–26 நிதியாண்டில் நம்நாட்டின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2 சதவீதம் உயர்ந்து 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில், முக்கிய வாடிக்கையாளராக அமெரிக்கா தொடர்ந்து முதன்மை சந்தையாக திகழ்கிறது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 54.1 சதவீதமாக, அதாவது 11.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 31.8 சதவீத பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. பிரிட்டன் மட்டும் 15.4 சதவீத பங்கை பெற்றுள்ளது.
நம் நாட்டின் மொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் கணினி சேவைகளின் பங்களிப்பு மட்டும் 69.3 சதவீதமாகும். தகவல் தொழில்நுட்பம் 13.96 லட்சம் கோடி ரூபாயாகவும், ஐ.டி. சார்பு துறைகள் ஏற்றுமதி 6.46 லட்சம் கோடி ரூபாயாகவும், பி.பி.ஓ., சேவைகள் ஏற்றுமதி 5.32 லட்சம் கோடி ரூபாயாகவும், பொறியியல் சேவைகள் ஏற்றுமதி 1.14 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
ஏற்றுமதி பணப்பரிவர்த்தனையில் 72.6 சதவீத பில்கள் அமெரிக்க டாலரிலேயே மேற்கொள்ளப் பட்டுள்ளன. யூரோ 9.6 சதவீதமும், இந்திய ரூபாய் 6.3 சதவீதமும் பங்கை வகிக்கின்றன. வெளிநாட்டு வணிக கிளைகளின் பங்களிப்பையும் சேர்த்தால், இந்தியாவின் மொத்த சாப்ட்வேர் சேவை வர்த்தகம் 22.73 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.