படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான மற்றும் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2026 ஜூலை 31) ஊடகவியலாளர்களால் உறைப்பான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்கவிருந்த நிகழ்வையே ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாகப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு அங்கமாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவிருந்தார். எனினும், கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அந் நிகழ்வை யாழ். ஊடக அமையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முழுமையாகப் புறக்கணித்தனர்.
கருத்தரங்கைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள், யாழ். மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகக் திரண்டு, ஊடகச் சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரியும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.