கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பிரிவில் இருந்த 35 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்று, அதனை கொண்டு இணையத்தில் சூதாட்டத்தில் (Online Gambling) ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்ற புலனாய்வு பணியகத்துடன் இணைக்கப்பட்ட நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் மேற்பார்வையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
மத்திய குற்ற புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் ஆலோசனையின் பேரில், நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜித வர்ணப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள கான்ஸ்டபிளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த மோசடி தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.