சென்னை:
லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு
முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக நிதியமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க இருப்பதாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த குற்றச்சாட்டை நானும் பார்த்தேன். உயர்கல்வித்துறை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சம்பந்தமே இல்லாமல் நிதியமைச்சர் உள்ளே புகுந்து இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். அவர் பேசியது பொதுக்கூட்டம் அல்ல, சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
சட்டமன்றத்தில் யார் என்ன வார்த்தை பேசினாலும் அதற்குப் பேசக் கூடியவர்கள் தான் முழுப் பொறுப்பாளர்கள். வெளியில் பேசுவதற்குப் போடும் வழக்கு வேறு, சட்டமன்றத்தில் பேசுவதற்குப் போடும் வழக்கு வேறு. அவர் ‘கொடுத்தேன், கொடுத்தேன்’ எனக் கூறுவது மிகப்பெரிய தவறுதான். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருவர் நான் சில தவறுகள் செய்ததாக அவதூறு கூறினார்; அவர் மீது 50 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன்.”
பழைய வழக்கின் பின்னணி சந்தேகம்
“கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருவர் முறையாகப் பள்ளிக்கூடம் நடத்தவில்லை என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். அவர் போலியாகக் கையொப்பம் போட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கூறினேன்; அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் இவ்வாறு பேசினாரா என்பது தெரியவில்லை.
அமைச்சர் பேசும்போது, ‘நான் சொல்ல வேண்டாம் எனப் பார்த்தேன்; அதற்கு நானே சாட்சி, நானே சாட்சி’ எனக் கூறுகிறார். அவர் லஞ்சம் கொடுத்தது மிகப்பெரிய தவறு. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளித்து, அவர்தான் சாட்சி என்று கூறும்போது அவரையே நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் நான் வைக்கும் முக்கியக் கோரிக்கை.”
ஆளுங்கூட்டணி மீதான விமர்சனங்கள்
“கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியின் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியும். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதைப் பார்த்திருப்போம். இடதுசாரி அமைப்புகள் போராடாமல் இருக்க வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இடதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்த அரசை நடத்துவது யார் என இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
கல்லூரி நடத்தும் அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் நடத்தும் கல்லூரியில் கேபிடேஷன் கட்டணம் வாங்கிக் கொண்டு கல்லூரி நடத்துகிறார். அவர் எந்தக் குற்றச்சாட்டை கூறினாலும் அதைச் சட்டப்படி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”
சபாநாயகரின் பொறுப்பு
“அமைச்சர் மரிய வில்சனின் பேச்சு சட்டமன்றத்தில் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் எப்படி இதனை அனுமதித்தார் என்பதும் புரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் இதனை அவைக்குறிப்பில் இருந்து இன்னும் நீக்கவில்லை. அதற்குரிய விளக்கத்தைக் கேட்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது” என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
#AnbilMahesh #MariaWilson #DVAC #TamilNaduAssembly #DMK #TVKGovernment #TamilNaduPolitics #SchoolEducation #CorruptionCharges #BriberyAllegations #AssemblyControversy #TNPolitics #ChennaiNews #AnnaArivalayam #TamilNews #PoliticalUpdates #SpeakerResponsibility #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates