சென்னை:
அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும்
காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என சில அமைச்சர்கள் பேசி வருவதாக ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமிர்தம் இல்லத் திருமண விழா
சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சகோதரியின் மகன் அமிர்தம் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“அறிவாலயம் தோன்றிய பின்தான் தமிழர்கள் வீட்டிற்கு வெள்ளை அடித்தனர்”
திருமண நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “காருக்கு தேசியக்கொடி வந்து விட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என சில அமைச்சர்கள் பேசி வருகின்றனர். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப்பிரவேசம் செய்த பின்பு தான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளை அடித்துக் கொண்டார்கள்.
அறிவாலயம் தோன்றிய பின்னர் தான் தமிழர்கள் தங்கள் வீட்டிற்கு வெள்ளை அடித்துக் கொண்டனர். தமிழ்நாடும் தனக்கு வெள்ளை அடித்து கொண்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்” என்று ஆவேசமாகக் கூறினார்.
அமைச்சர் நிர்மல் குமாரின் கடும் விமர்சனப் பின்னணி
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தி.மு.க.வை பழிவாங்க வேண்டியது இல்லை. மக்களே அவர்களை அடித்து துவைத்து வெளியேற்றி விட்டார்கள். நீங்கள் எவ்வளவு கொள்ளை அடித்தீர்கள்? என்று தெரிந்து தான் மக்கள் உங்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.
தீய சக்தி தி.மு.க.வை ஒழித்தே தீருவோம் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதற்காக தான் நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். ஜெயலலிதாவும் தீய சக்தி தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தி.மு.க.வை ஒழித்துக் கட்டி விட்டார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்கு விட வேண்டிய நிலை வரும். முரசொலி டிரஸ்ட்டை கைப்பற்ற அந்த குடும்பத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என விமர்சித்திருந்தார்.
தி.மு.க. நிர்வாகிகளின் எதிர்வினை
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. நிர்வாகிகள் கடுமையாக எதிர்வினையாற்றி வந்த நிலையில், இன்று ஆ.ராசா அமைச்சர் நிர்மல் குமாரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
#ARaja #DMK #AnnaArivalayam #MKStalin #UdhayanidhiStalin #ChiefMinisterVijay #TVKGovernment #TamilNaduPolitics #MinisterNirmalKumar #ChennaiNews #PoliticalUpdates #DravidianModel #Kalaignar #Periyar #ArignarAnna #TamilNews #TNPolitics #LatestNewsTN #TrendingTN #DMKParty