அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு ‘டோடா’ (Doda) அல்லது ‘கசகசா உமி’ (Poppy husk) என்று பொதுவாக அழைக்கப்படும் உலர்ந்த அபின் கசகசா காய்களை (Dried opium poppy pods) பல மாதங்களாக கடத்தி வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த இந்திய லாரி ஓட்டுநர் ஒருவரை அமெரிக்க ஃபெடரல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, மிச்சிகனின் போர்ட் ஹூரான் (Port Huron) பகுதியில் உள்ள ப்ளூ வாட்டர் பிரிட்ஜ் (Blue Water Bridge) எல்லைக் கடவையில் 40 வயதான வைபவ் சக்சேனா (Vaibhav Saxena) என்பவரது லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது, அவரது லாரியில் அட்டைப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20.21 கிலோகிராம் (ஏறத்தாழ 45 பவுண்டுகள்) எடையுள்ள உலர்ந்த அபின் கசகசா காய்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர். ஆரம்பகட்ட களப் பரிசோதனைகளில், அமெரிக்க மற்றும் கனடிய சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட/கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ‘மார்பின்’ (Morphine) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே சக்சேனாவின் நடமாட்டத்தை கண்காணித்து வந்ததாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (U.S. Homeland Security) புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிச்சிகனில் அவரது வணிக ரீதியான லாரிக்கும் பிற வாகனங்களுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமான முறையில் சந்திப்புகள் நிகழ்ந்ததை அவர்கள் அவதானித்துள்ளனர். சக்சேனா மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு முன்னர், பெரிய பெட்டிகள் பலமுறை கைமாற்றப்பட்டதை கண்காணிப்புப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கடத்தல் நடவடிக்கை கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்த விசாரணைக்குத் தொடர்புடைய போர்ட் ஹூரான் முகவரிக்கு இது போன்ற டஜன் கணக்கான பார்சல்கள் அனுப்பப்பட்டதை ஏற்றுமதி ஆவணங்கள் காட்டுவதாக ஃபெடரல் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சக்சேனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இது போன்ற பயணங்களை பலமுறை மேற்கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும், “இந்த நாள் என்றாவது ஒரு நாள் வரும் என்று தனக்குத் தெரியும்” என புலனாய்வாளர்களிடம் கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்தியதாக சக்சேனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஃபெடரல் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளைப் பெற்றுத்தரக்கூடிய குற்றமாகும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவார். இந்த வழக்கு தற்போது அமெரிக்க ஃபெடரல் நீதி அமைப்பின் முன் விசாரணையில் உள்ளது.