026 ஜூன் 19
கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு, கனடா கால்பந்து அணியினரைச் சந்தித்து அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உரையாற்றினார்.
வான்கூவரின் ‘பிசி பிளேஸ்’ (BC Place) மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் உற்சாகத்திற்கு மத்தியில், கனடா அணியின் முன்கள வீரர் ஜொனாதன் டேவிட் (Jonathan David) ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார். உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் கொன்காகாஃப் (CONCACAF) பிராந்தியத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் அடித்த முதல் ஹாட்ரிக் கோல் இதுவாகும்.
இருப்பினும், இந்த மாபெரும் வெற்றியின் மகிழ்ச்சிக்கு மத்தியில், கனடா அணியின் நடுகள வீரர் இஸ்மாயில் கோனே (Ismaël Koné) கடுமையான காயத்திற்குள்ளாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
போட்டி முடிந்த பிறகு, வீரர்களின் ஓய்வறைக்குச் (Locker room) சென்ற பிரதமர் கார்னி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக வாழ்த்தியதுடன், வீரர்களின் விளையாட்டுத் திறன் மற்றும் சிறந்த செயல்பாட்டைப் பாராட்டினார்.
அவரது உரையின் முழு விபரம் இதோ:
“நீங்கள் அனைவரும் இப்போது என்ன உணர்கிறீர்கள், ஏன் இந்த நாடே என்ன உணர்கிறது என்பதைப் புரிந்துகொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன். இஸ்மாயில் அடைந்த அந்தப் பயங்கரமான காயம்… இதுபோன்ற தருணங்களில்தான் ஒரு உண்மையான அணியின் குணாதிசயத்தையும் (Character) ஒற்றுமையையும் உங்களால் பார்க்க முடிகிறது.
காயமடைந்து வெளியேறும் போதும் அவர் ரசிகர்களைப் பார்த்து கைதட்டுகிறார், கத்தார் வீரர்களுடன் கைகுலுக்குகிறார். அவருக்குப் பதிலாக களம் புகுந்த நதன் சலிபா (Nathan Saliba) உடனடியாக கோல் அடிக்கிறார்.
நீங்கள் இஸ்மாயிலின் ஜெர்சியை உயர்த்திப் பிடித்து அதைக் கொண்டாடுகிறீர்கள், உங்கள் நிதானத்தைக் காத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் வெறும் கொன்காகாஃப் (CONCACAF) சாதனையை அல்லது வேறு பல சாதனைகளை மட்டும் முறியடிக்கவில்லை – 32 முறை கோல் அடிக்க முயற்சி செய்து, அதில் 10 முறை இலக்கைத் தாக்கி, 19 கார்னர்களைப் பெற்று, 70 சதவீதத்திற்கும் அதிகமான பந்து கட்டுப்பாட்டை (Possession) வைத்துள்ளீர்கள் என்பதை இந்த நாட்டிற்கு நிரூபித்துள்ளீர்கள்.
சில மனிதர்கள் தங்களது வாழ்நாளில் ஒருபோதும் அடைய முடியாத ஒரு உன்னதமான குணாதிசயத்தை நீங்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒட்டுமொத்த நாடும், ஏன் உலகின் பெரும் பகுதியும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் அதனைச் செய்து காட்டியுள்ளீர்கள். இன்று இதைப் பார்க்காதவர்கள் கூட, நாளைக்குள் இதன் சிறப்பம்சங்களை (Highlights) நிச்சயம் பார்ப்பார்கள்.
ஒரு கனடியனாக நான் இதைவிடப் பெருமைப்பட முடியாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அனைத்து கனடியர்களின் சார்பாகவும், நீங்கள் இந்த நிலையை எட்டுவதற்காகச் சிந்திய வியர்வைக்கும் உழைப்பிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் இந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், உங்கள் குடும்பத்தினரை, நண்பர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்; அதேநேரம் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடத்தையும் கற்பிக்கிறீர்கள்.
அனுமதியளித்தால் இன்னும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். சில வாரங்களுக்கு முன்பு, நானும் ஆடமும் (எங்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆடம் வான் கோவர்டன்) ஒன்டாரியோவில் உள்ள பிராம்ப்டன் (Brampton) பகுதிக்குச் சென்றிருந்தோம்.
உங்களில் சிலருக்கு அந்த இடத்தை நன்றாகத் தெரியும்தானே? இன்று நமது முதல் இரண்டு கோல்களை அடித்த சைல் லாரின் (Cyle Larin) பிராம்ப்டனைச் சேர்ந்தவர், ஜொனாதன் ஒசோரியோவும் (Jonathan Osorio) பிராம்ப்டனைச் சேர்ந்தவர் தான். என்னால் பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும்.
நீங்கள் காட்டிய முன்மாதிரியான உதாரணத்தாலும், அங்கு நாம் ஒரு புதிய விளையாட்டு வளாகத்தை (Sports complex) உருவாக்கி வருவதாலும் தான் நாங்கள் பிராம்ப்டனுக்குச் சென்றோம். உண்மையைச் சொல்வதானால், இந்த உயர் மட்டப் போட்டிகளுக்காக மட்டும் நாங்கள் அந்த விளையாட்டு வளாகத்தை உருவாக்கவில்லை. அது பிராம்ப்டன் என்பதால், உங்களைப் போல ஒரு சிலரே இந்த நிலைக்கு உயர முடியும். ஆனால், நாங்கள் அதை ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் கால்பந்து விளையாடி, உங்களைப் போல மாற வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்குகிறோம்.
இன்று நீங்கள் காட்டிய அந்த கூட்டுப் பொறுப்பையும், சவால்களை எதிர்கொண்ட விதத்தையும் அவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். உங்களை எண்ணி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் இந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொள்ள என்னை அனுமதித்ததற்கு நன்றி. வீரர்களே, இறுதிவரைச் சென்று கோப்பையை வெல்லுங்கள்!”