சென்னை:
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கோயில்களின் டெண்டர்களும் (ஒப்பந்தப்புள்ளி) இனி முற்றிலும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து கோயில்களுக்கும் முறையான உறுதிமொழிப் படிவங்கள் மற்றும் ஒப்பந்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒரே மாதிரியான வடிவத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பார்க்கிங் வசதி, மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பொதுவான டெண்டர் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பு ஒவ்வொரு கோயிலுக்கும் மாறுபட்டு இருந்த EMD எனப்படும் வைப்புத் தொகை தற்போது ஒரு சதவிகிதமாகவும், செக்யூரிட்டி தொகை 5% ஆகவும் சீரமைக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு டெண்டருக்கும் ஜிஎஸ்டி மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இல்லாமல் டெண்டர் வழங்கப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த விலைக்குப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் வகையிலும், பெருமுதலாளிகள் மட்டுமின்றி சிறு வியாபாரிகளும் பங்கேற்கும் வகையிலும் டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. காண்டிராக்ட் அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இனி சேலரி ஸ்லிப் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, கோயிலுக்குள் காலணி அணிந்து சென்றதாகத் தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்தார். ஸ்ரீரங்கத்தில் கோபுர சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றபோது, அந்தப் பகுதி முழுவதுமாக இடிக்கப்பட்டு, கல்லும் மண்ணும் ஆணியுமாகக் கிடந்ததால், அடிப்படைப் பாதுகாப்பு காரணங்களுக்காகவே தான் காலணி அணிந்து சென்றதாக அவர் தெளிவுபடுத்தினார். இதை வைத்து சிலர் அரசியல் செய்வதாக அவர் விமர்சித்தார். மேலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பழனி நில விவகாரம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் நிலத்தை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்கள் என நான்கு பேர் இதுவரை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தன் குடும்பத்தினர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தன்னிடம் இரண்டு கோடி ரூபாய் பணம் இல்லை என்றும் அவர் கூறினார். தன் பெயரைக் கெடுக்க நினைக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#HRCE #MinisterRamesh #TamilNaduGovt #TempleTenders #OnlineTender #ChennaiNews #PalaniLandIssue #BmNews #TamilNews #PoliticalUpdate #TamilNaduPolitics #BreakingNewsTN #SrirangamTemple #TamilNewsLive