சென்னை:
காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையிட்ட பிறகும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
\”தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்து விட்டுள்ள நீர் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு டி.எம்.சி. அடி அளவைக்கூட எட்டவில்லை\” என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) தலைவர் வினீத் குப்தா கூறியுள்ளதைத் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். \”2018-இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் கிடைக்கப்பெற வேண்டிய அளவு 27.2 டி.எம்.சி. அடியாக இருந்த நிலையில், ஜூலை 27 வரையிலான நிலவரப்படி அங்கு 0.6 டி.எம்.சி. அடி மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. ஜூன் முதல் நாள் முதல் நீர் வரத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பற்றாக்குறை சுமார் 33 டி.எம்.சி. அடியாகும். இது நிர்ணயிக்கப்பட்ட அளவில் 10 சதவீதம் மட்டுமே\” என வினீத் குப்தா தெரிவித்த புள்ளிவிவரங்களை அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ள நிலையில், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறுவை சாகுபடி முழுமையாக இல்லாமல் போய்விட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயமும் மிகப்பெரிய கேள்விக் குறியாகி உள்ளது. இனியும் கர்நாடக அரசு நமக்கு நியாயம் செய்யும் என நம்புவதற்குச் சிறிதும் இடமில்லை. எனவே, தமிழ்நாட்டின் சார்பில் நாம் நமது நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் திருமாவளவன் ஆணித்தரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
#Thirumavalavan #CauveryIssue #VCK #TamilNaduGovt #DeltaFarmers #BmNews #Karnataka #TamilNews #BreakingNewsTN #WaterDispute #PoliticalUpdate #TamilNewsLive