யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன் இணைந்து புதிய வகுப்பறைக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நிகழ்வில் உரையாற்றியபோது, நெடுந்தீவு என்பது ஒரு தீவு மட்டுமல்ல; ஆயிரம் ஆண்டுகால வரலாற்றையும், தனித்துவமான பண்பாட்டு மரபையும், கடல்சார் நாகரிகத்தையும் தன்னகத்தே சுமந்து நிற்கும் பாரம்பரிய மிக்க மண் என்பதை வலியுறுத்தினேன். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் வரலாற்றுச் சின்னங்கள், பவளக் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், உலகப் புகழ்பெற்ற காட்டுக் குதிரைகள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவை நெடுந்தீவின் தனித்துவ அடையாளங்களாகும். இந்த வரலாற்றுச் செல்வங்களைப் பாதுகாத்துக்கொண்டு, நவீன அபிவிருத்தியையும் சமநிலையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும் என்பதையும் குறிப்பிட்டேன்.
மேலும், தீவுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், தகவல் தொழில்நுட்ப வசதிகள், மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதையும், நெடுந்தீவின் முழுமையான அபிவிருத்திக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து செயற்படுவேன் என்பதையும் உறுதியளித்தேன்.
புதிய வகுப்பறைக் கட்டிடம் என்பது வெறும் சிமெண்டும் கற்களும் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிடம் அல்ல; அது அறிவை வளர்க்கும் ஆலயம், கனவுகளை நனவாக்கும் தளம், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் அடித்தளம் என்பதை வலியுறுத்தினேன். இந்த வகுப்பறைகளில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள் உயர்ந்த இலட்சியங்களுடன் கல்வியில் சிறந்து விளங்கி, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பொறுப்புள்ள, பயனுள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பமாகும்.
மாணவர்களின் உற்சாகமான வரவேற்பு, பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இந்நிகழ்விற்கு மேலும் மெருகூட்டின. அவர்களின் திறமையும் தன்னம்பிக்கையும் நெடுந்தீவின் எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக இருப்பதை வெளிப்படுத்தின.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய பாடசாலை அதிபர், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் இத்திட்டம் வெற்றியடைய பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நெடுந்தீவின் கல்வி முன்னேற்றமும், தீவின் முழுமையான அபிவிருத்தியும் எமது பொறுப்பாகும். அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் இந்தப் பயணத்தில் என்றும் உங்களுடன் இணைந்து பயணிப்பேன்