சென்னை:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை, கரூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் சுமார் 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், முன்னாள் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள், கூட்டாளிகள் என 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த பார் டெண்டர்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே சாதகமாக டெண்டர் வழங்கப்பட்டதாகவும், போலி டிடி-க்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 284 பார்கள் மூடப்பட்டதாகக் கணக்கில் காட்டப்பட்டு, உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே பல மாதங்களாகச் சட்டவிரோதமாகச் செயல்பட்டதன் மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, டாஸ்மாக் நிறுவனத்தின் 45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. போலி டிடிக்கள் மூலம் போக்குவரத்து நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கி பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசியல் பிரமுகர்கள் சிலர் பார் உரிமையாளர்களிடம் கட்சிப் பணம் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்துள்ளதும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி செந்தில் பாலாஜியின் செல்வாக்கின் கீழ் குறிப்பிட்ட மதுபான ஆலைகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அந்த எஃப்.ஐ.ஆரில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த மெகா ஊழல் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
#SenthilBalaji #TasmacScam #DVACRaid #TamilNaduPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #CorruptionCase #KarurNews #TasmacBar #DmkLeader #PoliticalUpdate #TamilNewsLive