புதுடெல்லி:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 31 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணி நியமன ஆணையை கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், வயது மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில்தான் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், \”சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப் பணி கோரினால் என்ன செய்வது? வேலைவாய்ப்பிற்காகப் பலர் காத்திருக்கிறார்களே?\” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி உதவுவதுதான் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியானவுடன், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பணி நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்த முடிவை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் தற்போது மாபெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
#KarurStampede #TnGovt #SupremeCourt #MaduraiHighCourt #CmVijay #BmNews #TamilNews #BreakingNewsTN #GovernmentJobs #LawMinisterNirmalKumar #PoliticalUpdate #TamilNaduPolitics #TamilNewsLive