கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency alert systems) மேலதிக சீர்திருத்தங்கள் தேவை என ஒட்டிசம் (Autism) பாதிப்புடைய கனடியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடக்கு நகர்ப்பகுதி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்திலிருந்து (Day home) காணாமல் போயிருந்த 11 வயதான பார்க்கர் (Parker) என்ற சிறுவனின் உடலை, அவர் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகவுள்ள நிலையில், நகரின் நிலத்தடி நீர் விநியோகக் குழாய் அமைப்பிற்குள் இருந்து புதன்கிழமை பிற்பகல் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ஒட்டிசம் குறைபாடுடைய மற்றும் பேசும் திறனற்ற (Non-verbal) அச்சிறுவனைத் தேடும் தீவிரப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். நகரின் குடியிருப்புகளைச் சல்லடை போட்டுத் தேடிய அவர்கள், சிறுவனைக் கவர அவனுக்குப் பிடித்த ‘டிஸ்னி’ பாடல்களையும் ஒலிபரப்பித் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இந்தத் தேடுதல் வேட்டையானது, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்கள் காணாமல் போகும்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது எவ்வாறு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பிற்காக அவசர எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் முதல் மீட்புப் பணியாளர்களின் (First-responders) பயிற்சிகளில் “அவசர மாற்றங்கள்” தேவை என ‘தேசிய ஒட்டிசம் நெட்வொர்க்’ (National Autism Network) வலியுறுத்தியுள்ளது.
நரம்பியல் ரீதியாக மாறுபட்ட (Neurodivergent) சிறுவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுபோன்ற பரவலான அவசர எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுமாறு அதிகாரிகளை வலியுறுத்தித் தாய்மார்கள் குழு ஒன்று மனுக்களையும் திரட்டத் தொடங்கியுள்ளது.
“ஒட்டிசம் பாதிப்புடைய மனிதர்கள், குடும்பங்கள், வல்லுநர்கள் மற்றும் சமூகங்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், தீர்வுகளை அடையாளம் காணவும், உண்மையான மாற்றத்தை உருவாக்க உதவவும் வரும் நாட்களில் வழிவகுக்கப்படும்” என்று அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“இந்த உலகம் இன்னும் அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாத காரணத்தினால் எந்தவொரு குழந்தையும் உயிரை இழக்கக்கூடாது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.