ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனக் சேர்மங்களை உருவாக்கக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவுகோல்களான சப்தம் மற்றும் காற்றின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கழிவு அகற்றும் அறிக்கை ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டத்தையும் தொழிற்சாலை தயாரித்திருக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இருப்பதாக வெளிச்சத்திற்கு வந்த தொழிற்சாலையின் மேல் தளத்திற்கு, பதில் நீதவான் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பூம் டிரக் வாகனம் மூலம் சென்றடைந்தனர்.
இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த விசாரணையின் போது, தீ விபத்துக்கான காரணங்கள், தொழிற்சாலையின் தீ பாதுகாப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு தரநிலைகள், ஊழியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான வசதிகள் மற்றும் அவசரகால மீட்பு முறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.