A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (28.07.2026) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் பாலம் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
புளியம்பொக்கனை பாலத்தின் புனரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து வசதி மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.