புதுடெல்லி:
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி மேகதாது அணை குறித்து எழுத்துப் பூர்வமாக சில முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தார். 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? மற்றும் மேகதாது திட்டத்துக்காக கர்நாடக அரசு இந்த மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிலில், \”காவிரி நீர் தொடர்பான பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை\” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ல் வழங்கிய தீர்ப்பின்படி, எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான உரிமையை எந்த உத்தரவும் பாதிக்காது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில், கர்நாடகாவின் மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியும் காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இணங்கவும் திருத்தப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்குமாறு கர்நாடக திட்ட அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முழுமையாகப் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ள நிலையில், தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள இந்தப் பதில் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
#MekedatuDam #CentralGovt #CauveryIssue #AnbumaniRamadoss #TamilNadu #Karnataka #ParliamentNews #BmNews #DeltaFarmers #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNews #TamilNaduPolitics #TamilNewsLive