மத்திய பசுபிக் சமுத்திரத்தில் மிக மிக வலுவான எல்நினோ உருவாகுகின்றது. இன்றைய தினம் நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 1.89 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இந்த எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதன்முதலாக இந்த அதிகரிப்பு வடமேற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ( மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கரிற்கு அண்மையில்) அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (IOD) -0.06 °C என்ற அளவில் உள்ளது. இது வேகமாக அதிகரித்து வருகின்றது. இது எதிர்வரும் மூன்று முதல் நான்கு வாரங்களில் நேர்மறையான (Positive) நிலைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இலங்கை உட்பட்ட பல இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பகற்பொழுது வெப்பநிலை வெப்ப அலைக்குரிய( Heat Wave) நிலையை எட்டியுள்ளது.
எல்நினோவின் உச்சம் எதிர்வரும் 2027 பெப்ரவரி மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரணமாக வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் இந்து சமுத்திரத்தின் சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் என்ற அளவிலேயே நிகழ்வதுண்டு. இந்த வெப்பநிலை அளவு அதிகரிக்கும் போதே தாழமுக்கங்கள் மற்றும் புயல்கள் தோன்றுவதுண்டு. இம்முறை எல்நினோவின் காரணமாக சராசரி வெப்பநிலையே ± 29 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக எந்தவிதமான நீர் மீள்நிரப்புகையும் இடம்பெறவில்லை( மழை கிடைக்கவில்லை).
கடந்த 09 நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்கமானது மிக உயர்ந்த அளவில் காணப்படுகிறது.
இந்த மிக வலுவான எல்நினோவின் பாதிப்புக்களை மீளவும் குறிப்பிட விரும்புகின்றேன்( இது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய இலங்கை முழுவலற்குமானது.)
1. 2026 செப்டம்பர் வரை அதிக வெப்பநிலை, மிகக் குறைவான மழைவீழ்ச்சி, நீர்ப்பற்றாக்குறை அல்லது நீரியல் வரட்சி.
வரட்சி அதன் தன்மையைப் பொறுத்து நான்கு வகைப்படும்.
நிலை 1: வளிமண்டல வரட்சி
நிலை 2: விவசாய வரட்சி
நிலை 3: நீரியல் வரட்சி
நிலை 4: சமூக பொருளாதார வரட்சி
2. 2026 ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள். செறிவான மழைவீழ்ச்சி குறுகிய சில நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நீண்ட கால முன்னறிவிப்பினடிப்படையில் இக்காலப்பகுதியில்( எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்) மூன்று புயல்களுக்கும் ஐந்து தாழமுக்க நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.
ஏற்கெனவே தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக வேகமான காற்று காரணமாக ஆவியாக்க அளவு அதிகரித்து அதிக நீரிழப்பை எதிர்கொள்ளுகின்ற நிலையிலும் சிலர் நீரை விரயமாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. தற்போது நிலவும் அதிக ஆவியாக்கம் மற்றும் வரவிருக்கும் எல்நினோ நிலைமைகளைப்பற்றிய எந்தவிதமான கவலைகளுமின்றி நீரை விரயமாக்குகின்றார்கள்.
இது தொடர்பாக நீர் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் விரைந்து செயற்படவேண்டும்.
அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்கள் என சகல தரப்புக்களும் வரவிருக்கும் எல்நினோ தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே வடக்கு மாகாண விவசாய அமைச்சு, யாழ்ப்பாண மாவட்ட கமநலத்திணைக்களம், வடக்கு மாகாண நீரியல் வளத்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், MSEDO (Mannar Social and Economical Development Organization) மற்றும் கிளிநொச்சி வாழும் பெண்கள் அமைப்பு எனப் பல அமைப்புக்கள் எல்நினோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
தற்போதைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையில் உருவாகியிருக்கும் எல்நினோ வினால் எமக்கு வரட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளன. இது சாத்தியமே… ஏனெனில் எலநினோ நீண்ட நாட்களுக்கான அதிக வெப்பநிலை வரட்சியையும், குறுகிய நாட்களில் அதிக மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு விந்தையான வானிலைத் தோற்றப்பாடாகும்.
-நன்றி: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா –