இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மால்லா எம்’ஜித் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்த போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடனான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு யுனிசெப் நிறுவனம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளி அனர்த்தத்தின் போது வழங்கிய உதவிகள், கல்வி மற்றும் ஆரம்ப சிறுவர் பருவக் கல்விச் சீர்திருத்தங்களுக்கான அதன் நீண்டகால பங்களிப்புகள், மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து அவற்றுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட உத்திகள் என்பவற்றுக்காகவும் பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.
கொள்கைகளை வகுப்பதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதிலேயே தற்போதைய சவால் உள்ளது. சிறுவர் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முதன்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியத்துவமுடையது.
நிறுவன ரீதியான திறன் மற்றும் மனித வளங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும். சிறுவர் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.