கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அங்கீகாரமற்ற நிலமீட்புகள் மற்றும் சட்டவிரோத கடற்கரை கட்டுமானங்களை கையாள்வதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதரவினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய ஒழுங்குபடுத்தப்படாத செயற்பாடுகள், இப்பிராந்தியத்தில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியிலான சவால்களுக்கு வழிவகுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகாரமற்ற கடற்கரை கட்டுமானங்கள் கிழக்கு கடற்கரையோரத்தில் கடல் அரிப்பை தீவிரப்படுத்தி, பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் கவலைகளுக்கு அப்பால், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இடம்பெயர்ந்த சமூகங்களுக்கான முறையான மீள்குடியேற்ற வேலைத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் உள்ளிட்ட மாகாணத்தின் தற்போதைய அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களையும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், உள்ளூராட்சி அமைப்புகளை உருவாக்குவதில் நிறுவப்பட்ட நிர்வாக நெறிமுறைகளிலிருந்து விலகிச் செயற்பட்டமையானது பிராந்திய அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக, சட்ட அமலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் “கிழக்கு மாகாண காணி பாதுகாப்பு குழு” (Eastern Province Land Protection Committee) ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இக்குழுவின் தலைவராக தென் மாகாண முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பள்ளியகுருகே (Senaka Palliyaguruge) செயற்படவுள்ளதுடன், இதில் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவுள்ளனர்.
இவ்நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பொலிஸ் பிரதி அதிபர் (DIG) ஒருவரின் தலைமையிலான சிறப்பு அமலாக்கப் பிரிவு ஒன்றும் நிறுவப்படவுள்ளது. அரசியல் பின்னணியைக் கொண்டதாகக் கூறப்படும் சட்டவிரோத காணி அபகரிப்புகள் மற்றும் அங்கீகாரமற்ற நிலமீட்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டு, இதுவரை எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்படாத அரச காணிகளை மீண்டும் அரசாங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இக்காணிகள் உள்ளூர் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஆதரவாக மறுவிநியோகம் செய்வதற்காக பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதேவேளை, கடற்கரை பாதுகாப்பை உறுதி செய்யும் அதேநேரம், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முறையான திட்டத்தை விரைவுபடுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடற்கரையோர ஹோட்டல் அபிவிருத்திகளை நிர்வகிப்பதில் சட்டபூர்வமான மற்றும் நடுநிலையான அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக வெளிப்படையான ஒழுங்குமுறை பொறிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.