சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 75,000 வரை முழு தள்ளுபடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி என்ற தவெக அரசின் அறிவிப்பிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “பயிர் கடன் தள்ளுபடியில் அனுபவமில்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது. தேர்தலின் போது குறு, சிறு விவசாயிகளின் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், தற்போது தரம் பிரித்து அறிவிப்பு வெளியிடுவது விவசாயிகளை வஞ்சிக்கின்ற செயல்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “சுமை தூக்கும் ஒட்டகத்தை ஏமாற்றுவதைப் போல, முதுகில் இருக்கும் சிறு மூட்டையை மட்டும் இறக்கி வைத்துவிட்டு, விவசாயிகளின் சுமையைக் குறைப்பதாக இந்த அரசு நாடகமாடுகிறது” என்று அவர் சாடியுள்ளார். தவெக அரசின் இந்த அறிவிப்பு சரித்திரத்திலேயே இல்லாத ஒன்று என்றும், அனுபவமற்ற முதலமைச்சர் துக்ளக் பாணியில் ஆட்சி நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ”உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் கோடீஸ்வரர்கள் சோற்றில் கை வைக்க முடியும்” என்பதை நினைவூட்டிய எடப்பாடி பழனிசாமி, பெரு விவசாயிகள் வாங்கிய கடனில் 50 சதவீதத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குறு, சிறு விவசாயிகளின் அனைத்துப் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
#EdappadiPalaniswami #EPS #ADMK #CmVijay #CropLoanWaiver #FarmersWelfare #TvkGovernment #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #FarmersRights #AgriculturalCrisis #TamilNaduNews #PoliticalAttack #Governance #FarmersProtest #TamilPolitics #VijayGovernment #LoanWaiverScheme #TamilNaduFarmers